Edikaddar Siddhar history and padalkal





இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார். [1]
பாடல்கள்




காப்பு
1:

ஆதி யந்தமில் லாதவ னாதியைத்
தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்
மோ துறும்படி முப்பொறி யொத்துறக்
காத லாகக் கருத்திற் கருதுவாம்.
தாண்டவராயக்கோன் கூறுதல்
2:

எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும்
எல்லாப் பொருள்களு மெண்ணரிய
வல்லாள னாதி பரம சிவனது
சொல்லா லாகுமே கோனாரே.
3:

வானியல் போல வயங்கும் பிரமமே
சூனிய மென்றறிந் தேத்தாக்கால்
ஊனிய லாவிக் கொருகதி யில்லையென்
றோர்ந்துகொள் ளுவீர்நீர் கோனாரே.
4:

முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது
முத்திக் குறுதிகள் செய்யாக்கால்
சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ்
சேரா வாகுமே கோனாரே.
5:

தொல்லைப் பிறவியின் தொந்தமுற் றறவே
சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு
இல்லையென் றெண்ணுவீர் கோனாரே.
6:

ஆரண மூலத்தை அன்புடனே பர
மானந்தக் கோலத்தைப் பன்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
போதத்தைச் சார்ந்திடு கோனாரே.
7:

காலா காலங் கடந்திடு சோதியைக்
கற்பனை கடந்த அற்புதத்தை
நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை
நோக்கத்திற் காண்பது கோனாரே.
8:

சொல்லருஞ் சகல நிட்கள மானதைச்
சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற்
அந்தகன் கிட்டுமோ கோனாரே.
9:

சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
நற்கதி சேர்ந்திடும் கோனாரே.
10:

மும்மலம் நீக்கிட முப்பொறிக் கிட்டாத
முப்பாழ் கிடந்ததா மப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமைத்துஞ்
சிந்தையில் வைப்பீரே கோனாரே.
11:

பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்ற நின்றதைப் பற்றி யன்பாய்
நெஞ்சத் திருத்தி யிரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே.
நாராயணக்கோன் கூறுதல்
12:

சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப்
பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே.
13:

கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
தண்ணளியை யுள்ளில்வைத்துச் சாரூபஞ் சாருவனே.
கண்ணிகள்
14:

மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே.
15:

சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ்,
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே.
16:

ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாங் கண்டறிவாய் தாண்ட வக்கோனே.
17:

ஓசையுள்ள டங்குமுன்னந் தாண்ட வக்கோனே - மூல
ஓங்காரங் கண்டறிநீ தாண்ட வக்கோனே.
18:

மூலப் பகுதியறத் தாண்ட வக்கோனே - உள்ளே
முளைத்தவேர் பிடுங்கேடா தாண்ட வக்கோனே.
19:

சாலக் கடத்தியல்பு தாண்ட வக்கோனே - மலச்
சாலென்றே தேர்ந்தறிநீ தாண்ட வக்கோனே.
20:

பற்றே பிறப்புண்டாக்குந் தாண்ட வக்கோனே - அதைப்
பற்றா தறுத்துவிடு தாண்ட வக்கோனே.
21:

சற்றே பிரமத்திச்திசை தாண்ட வக்கோனே - உன்னுள்
சலியாமல் வைக்கவேண்டுந் தாண்ட வக்கோனே.
22:

அவித்தவித்து முளையாதே தாண்ட வக்கோனே - குரு
அற்றவர் கதியடையார் தாண்ட வக்கோனே.
23:

செவிதனிற்கே ளாதமறை தாண்ட வக்கோனே - குரு
செப்பில் வெளி யாமல்லவோ தாண்ட வக்கோனே.
கட்டளைக் கலித்துறை
24:

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே.
நேரிசை வெண்பா
25:

போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்,
மோகம்போம் மூர்க்கம்போம் மோசம்போம் - நரகம்போம்,
வேதமுத லாகமங்கண் மேலான தென்றுபல்கால்,
ஓதுபிர மத்துற்றக் கால்.
தாண்டவராயக்கோன் கூறுதல்
26:

தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே.
27:

ஆயிரத்தெட்டு வட்டமுங் கண்டேன்
அந்தவட் டத்துள்ளே நின்றதுங் கண்டேன்
மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன்
மந்த மனத்துறுஞ் சந்தேகந் தீர்த்தேன். (தாந்)
28:

அந்தக் கரணமெனச் சொன்னா லாட்டையும்
அஞ்ஞான மென்னு மடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
சாவா திருந்திடக் கோட்டையுங் கட்டினேன். (தாந்)
29:

மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை
வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே. (தாந்)
30:

பற்றிரண் டும்மறப் பண்புற்றேன் நன்புற்றேன்
பாலையு முட்கொண்டேன் மேலையாங் கட்கொண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன். (தாந்)
31:

அண்ணாக்கை யூடே யடைத்தே யமுதுண்ணேன்
அந்தரத் தரத்தை யப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூ சைபண்ணேன்
மெய்ஞ்ஞானம் ஒன்றன்றி வேறேயொன்றை நண்ணேன். (தாந்)
32:

மண்ணாதி பூதங்க ளைந்தையுங் கண்டேனே
மாய விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுட் கொண்டேனே
மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே. (தாந்)
33:

வாக்காதி யைந்தையும் வாகாய்த் தெரிந்தேனே
மாயைசம் பந்தங்க ளைந்தும் பிரிந்தேனே
நோக்கரும் யோகங்க ளைந்தும் புரிந்தேனே
நுவலும்மற் றைந்தியோக நோக்கம் பரிந்தேனே. (தாந்)
34:

ஆறா தாரத்தெய் வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்டவா னந்தத்திற் கூடு
கோசமைந் துங்கண்டு குன்றேறி யாடு. (தாந்)
நாராயணக்கோன் கூறுதல்
35:

ஆதி பகவனையே பசுவே
அன்பாய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான் பசுவே
சொந்தம தாகாதோ.
36:

எங்கும் நிறைப்பொருளைப் பசுவே
எண்ணிப் பணிவாயேல்
தங்கும் பரகதியில் பசுவே
சந்ததஞ் சாருவையே.
37:

அல்லும் பகலும் நிதம் பசுவே
ஆதி பதந்தேடில்
புல்லு மோட்சநிலை பசுவே
பூரணங் காண்பாயே.
38:

ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே
உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே பசுவே
நேர்மை யறிவாயே.
39:

எல்லா மிருந்தாலும் பசுவே
ஈசர் அருளிலையேல்
இல்லாத் தன்மையென்றே பசுவே
எண்ணிப் பணிவாயே.
40:

தேவனு தவியின்றிப் பசுவே
தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கு மாவியதாம் பசுவே
அத்தன் திருவடியே.
41:

தாயினும் அன்பனன்றோ பசுவே
சத்திக்குள் ளானவன்தான்
நேயம் உடையவர்பால் பசுவே
நீங்கா திருப்பானே.
42:

முத்திக்கு வித்தானோன் பசுவே
மூலப் பொருளானோன்
சத்திக் குறவானோன் பசுவே
தன்னைத் துதிப்பாயே.
43:

ஐயன் திருப்பாதம் பசுவே
அன்புற்றுநீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே
விட்டொடுங் கண்டாயே.
44:

சந்திர சேகரன்றாள் பசுவே
தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மான்முதலோர் பசுவே
ஏவல் புரிவாரே.
45:

கட்புலன் காணவொண்ணாப் பசுவே
கர்த்தன் அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப் பசுவே
உன்னத மெய்வாயே.
46:

சுட்டியுங் காணவொண்ணாப் பசுவே
சூனிய மானவஸ்தை
ஒட்டிப் பிடிப்பாயேல் பசுவே
உன்னை நிகர்ப்பவர்யார்.
47:

தன்மனந் தன்னாலே பசுவே
தாணுவைச் சாராதார்
வன்மர மொப்பாகப் பசுவே
வையத் துறைவாரே.
48:

சொல்லென்னு நற்பொருளாம் பசுவே
சோதியைப் போற்றாக்கால்
இல்லென்று முத்திநிலை பசுவே
எப்பொருளுஞ் சொல்லுமே.
பலரொடு கிளத்தல்
49:

கண்ணுள் மணியைக் கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைப் போற்றீரே.
50:

மனம் வாக்கு காயமெனும் வாய்த்தபொறிக் கெட்டாத
தினகரனை நெஞ்சமதிற் சேவித்துப் போற்றீரே.




பலரொடு கிளத்தல்
51:

காலமூன் றுடங்கடந்த கதிரொளியை யுள்ளத்தாற்
சாலமின் றிப்பற்றிச் சலிப்பறவே போற்றீரே.
52:

பாலிற் சுவைபோலும் பழத்தின் மதுப்போலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே.
53:

மூவர் முதலை முக்கனியைச் சர்க்கரையைத்
தேவர் பொருளைத் தெள்ளமுதைப் போற்றீரே.
54:

தூய மறைப்பொருளைச் சுகவா ரிதியமிர்தை
நேய முடனாளு நிலைபெறவே போற்றீரே.
55:

சராசரத் தைத்தந்த தனிவான மூலமென்னும்
பராபரத் தைப்பற்றிப் பவமறவே போற்றீரே.
56:

மண் ணாதி பூதமுதல் வகுத்ததொரு வான்பொருளைக்
கண்ணாரக் காணக் கருத்திசைந்து போற்றீரே.
57:

பொய்ப்பொருளை விட்டுப் புலமறிய வொண்ணாத
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்றுப் போற்றீரே.
58:

எள்ளிற்றை லம்போல எங்கும் நிறைபொருளை
உள்ளிற் றுதித்தே யுணர்வடைந்து போற்றீரே.
நெஞ்சொடு கிளத்தல்
59:

பூமியெல்லா மோர்குடைக்கீழ் பொருந்தவர சாளுதற்குக்
காமியம்வைத் தாலுனக்குக் கதியுளதோ கன்மனமே.
60:

பெண்ணாசை யைக்கொண்டு பேணித் திரிந்தக்கால்
விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே.
61:

மேயும் பொறிகடமை மேலிடவொட் டார்க்குவினை
தேயுமென்றே நல்வழியிற் செல்லுநீ கன்மனமே.
62:

பொன்னிச்சை கொண்டு பூமிமுற் றுந்திரிந்தால்
மன்னிச்சை நோக்கும் வாய்க்குமோ கன்மனமே.
63:

பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல்,
மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே.
64:

பேய்க்குரங்கு போலப் பேருலகி லிச்சைவைத்து,
நாய்நரிகள் போலலைந்தேன் நன்மையுண்டோ கன்மனமே.
65:

இரும்பையிழுக் குங்காந்தத் தியற்கைபோற் பலபொருளை,
விரும்பினதால் அவைநிலையோ விளம்புவாய் கன்மனமே.
66:

கற்பநிலை யால்லவோ கற்பகா லங்கடத்தல்
சொற்பநிலை மற்றநிலை சூட்சங்காண கன்மனமே.
67:

தேக மிழப்பதற்குச் செபஞ்செய்தென் தவஞ்செய்தென்,
யோகமட்டுஞ் செய்தாலென் யோசிப்பாய் கன்மனமே.
68:

சாகா திருப்பதற்குத் தான்கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன்மனமே.
அறிவொடு கிளத்தல்
69:

எல்லாப் பொருள்களையு மெண்ணப் படிபடைத்த
வல்லாளன் றன்னை வகுத்தறிநீ புல்லறிவே.
70:

கட்புலனுக் கெவ்வளவுங் காணா திருந்தெங்கும்
உட்புலனாய் நின்றவொன்றை உய்த்தறிநீ புல்லறிவே.
71:

விழித்திருக்கும் வேளையிலே விரைந்துறக்க முண்டாகும்,
செழித்திலங்கும் ஆன்மாவைத் தேர்ந்ததறிநீ புல்லறிவே.
72:

மெய்யிலொரு மெய்யாகி மேலாகிக் காலாகிப்
பொய்யிலொரு பொய்யாகும் புலமறிநீ புல்லறிவே.
73:

ஆத்துமத்தின் கூறான அவயவப்பேய் உன்னுடனே
கூத்துப் புரிகின்ற கோளறிவாய் புல்லறிவே.
74:

இருட்டறைக்கும் நல்விளக்காய் இருக்குமுன்றன் வல்லமையை,
அருட்டுறையில் நிறுத்திவிளக் காகுநீ புல்லறிவே.
75:

நல்லவழியிற் சென்று நம்பதவி யெய்தாமல்
கொல்வழியிற் சென்று குறுகுவதேன் புல்லறிவே.
76:

கைவிளக்குக் கொண்டு கடலில்வீழ் வார்போல
மெய்விளக்குன் னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே.
77:

வாசிக்கு மேலான வான்கதியுன் னுள்ளிருக்க
யோசிக்கு மேற்கதிதான் உனக்கரிதோ புல்லறிவே.
78:

அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே.
சித்தத்தொடு கிளத்தல்
79:

அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற - பர
மானந்தங் கண்டோமென்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை
மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற.
80:

அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற - நிறை
ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற
தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபற - பரஞ்
சோதியைக் கண்டோமெனத் தும்பீபற.
81:

ஐம்பொறி அடங்கினவே தும்பீபற - நிறை
அருவே பொருளாமெனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற - ஒரு
தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற.
82:

மூவாசை விட்டோமென்றே தும்பீபற - பர
முத்திநிலை சித்தியென்றே தும்பீபற
தேவாசை வைத்தோமென்று தும்பீபற - இந்த
செகத்தை யொழித்தோமென்று தும்பீபற.
83:

பாழ்வெளியை நோக்கியே தும்பீபற - மாயைப்
பற்றற்றோ மென்றேநீ தும்பீபற
வாழ்விட மென்றெய்தோந் தும்பீபற - நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற.
84:

எப்பொருளுங் கனவென்றே தும்பீபற - உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற - என்றும்
அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற.
குயிலொடு கிளத்தல்
85:

கரணங்கள் ஒருநான்கு மடங்கினவே - கெட்ட
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே.
சரணங்கள் ஒருநான்குங் கண்டனமென்றே - நிறை
சந்தோஷ மாகவே கூவுகுயிலே.
86:

உலகமோக் காளமாமென் றோதுகுயிலே - எங்கள்
உத்தமனைக் காண்பரிதென் றோதுகுயிலே
பலமதம் பொய்ம்மை யேயென் றோதுகுயிலே - எழு
பவமகன்யே றிட்டோம் நாமென் றோதுகுயிலே.
87:

சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார்குயிலே
மாதவங்கள் போலும் பலன் வாயாக் குயிலே - மூல
மந்திரங்கள் தான்மகிமை வாய்க்குங்குயிலே.
88:

எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே - மனம்
ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே - ஆதி
நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே.
மயிலொடு கிளத்தல்
89:

ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள்
ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றுங்
குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.
90:

இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே பக்தி
இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.
91:

கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலே - வரும்
காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே
பற்றூ டுருவவே பாயுமயிலே அகப்
பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே.
அன்னத்தொடு கிளத்தல்
92:

சிறுதவளை தான்கலக்கிற் சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின் மதிமயங்கு மடவனமே.
93:

காற்றின் மரமுறியுங் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடி லஞ்ஞானந் தூரப்போம் மடவனமே.
94:

அக்கினியால் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குநல் லறிவாலே பாவம் போம் மடவனமே.
95:

குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டிலுருப் படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே.
96:

அப்புடனே யுப்புச்சேர்ந் துளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுட னொன்றிநில்லு மடவனமே.
97:

காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே.
புல்லாங்குழலூதல்
98:

தொல்லைப்பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லையென் றூதுகுழல் - கோனே
இல்லையென் றூதுகுழல்.
99:

இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்
அந்தமா யூதுகுழல் - கோனே
அந்தமா யூதுகுழல்.
100:

மோன நிலையினில் முத்தியுண் டாமென்றே
கானமா யூதுகுழல் - கோனே
கானமா யூதுகுழல்.
புல்லாங்குழலூதல்
101:

நாற்போற் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
பேயரென் றூதுகுழல் - கோனே
பேயரென் றூதுகுழல்.
102:

ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி
சாடியே யூதுகுழல் - கோனே
சாடியே யூதுகுழல்.
103:

ஆட்டுக்கூட் டங்களை அண்டும் புலிகளை
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல்.
104:

மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களை
கட்டிவைத் தூதுகுழல் - கோனே
கட்டிவைத் தூதுகுழல்.
105:

கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
கிட்டாவென் றூதுகுழல் - கோனே
கிட்டாவென் றூதுகுழல்.
106:

பெட்டியிற் பாம்பெனப் பேய்மன மடங்க
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல்.
107:

எனதென்றும் யானென்றும் இல்லா திருக்கவே
தனதாக வூதுகுழல் - கோனே
தனதாக வூதுகுழல்.
108:

அற்றவிடமொன்றே யற்றதோ டுற்றதைக்
கற்றதென் றூதுகுழல் - கோனே
கற்றதென் றூதுகுழல்.
பால்கறத்தல்
109:

சாவா திருந்திடப் பால்கற - சிரம்
தன்னி லிருந்திடும் பால் கற
வேவா திருந்திடப் பால்கற - வெறும்
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
110:

தோயா திருந்திடும் பால்கற - முனைத்
தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார வுண்டிடப் பால்கற.
111:

நாறா திருந்திடும் பால்கற - நெடு
நாளு மிருந்திடப் பால்கற
மாறா தொழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற.
112:

உலகம் வெறுத்திடும் பால்கற - மிக்க
ஒக்காள மாகிய பால்கற
கலசத் தினுள்விழப் பால்கற - நிறை
கண்டத்தி னுள்விழப் பால்கற.
113:

ஏப்பம் விடாமலே பாற்கற - வரும்
ஏமன் விலக்கவே பால்கற.
தீப்பொறி யோய்ந்திடப்பால்கற - பர
சிவத்துடன் சாரவே பால்கற.
114:

அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
அண்டத்தி லூறிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற - தொல்லை
வேதனை கெடவே பால்கற.
கிடை கட்டுதல்
115:

இருவினையான மாடுகளை ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை யடக்கிவிடு கோனே.
116:

சாற்றரிய நைட்டிகரே தற்பரத்தைச் சார்வார் - நாளும்
தவமவமாக் கழிப்பவரே சனனமதில் வருவார்.
117:

அகங்கார மாடுகண்மூன் றகற்றிவிடு கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதைநீ யடக்கிவிடு கோனே.
118:

ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக்கட்டுக் கோனே - உடன்,
உறையுமிரு மலந்தனையு மோட்டிக் கட்டுகோனே.
119:

மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்கட்டுகோனே - மிக,
முக்கால நேர்மையெல்லா முன்பறிவாய் கோனே.
120:

இந்திரியத் திரயங்களை இறக்கிவிடு கோனே - என்றும்
இல்லையென்றே மரணங்குழு லெடுத்தூது கோனே.
121:

உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே - உனக்கு
உள்ளிருக்குங் கள்ளமெல்லாம் ஓடிப்போங் கோனே.
122:

முக்காய மாடுகளை முன்னங்கட்டு கோனே - இனி
மோசமில்லை நாசமில்லை முத்தியுண்டாங் கோனே.
123:

கன்மபல மாடுகளைக் கடைக்கட்டு கோனே - மற்றக்
கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டு கோனே.
124:

காரணக்கோ மூன்றனையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல
கைவசமாஞ் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே.
125:

பிரமாந்த ரத்திற் பேரொளி காணெங்கள் கோனே - வாய்
பேசா திருந்து பெருநிட்டை சாரெங்கள் கோனே.
126:

சிரமதிற் கமலச் சேவை தெரிந்தெங்கள் கோனே - முத்தி
சித்திக்குந் தந்திரஞ் சித்தத் தறியெங்கள் கோனே.
127:

விண்ணாடி வத்துவை மெய்யறிவிற் காணுங் கோனே - என்றும்
மெய்யே மெய்யிற்கொண்டு மெய்யறிவிற் செல்லுங் கோனே.
128:

கண்ணாடி யினுள்ளே கண்பார்த் துக்கொள்ளுங் கோனே - ஞானக்
கண்ணன்றிக்கண்ணாடி காணவொண்ணா தெங்கள் கோனே.
129:

சூனியமானதைச் சுட்டுவா எங்குண்டுகோனே - புத்தி
சூக்குமமே யதைச்சுட்டு மென்றெண்ணங் கொள் கோனே.
130:

நித்திய மானது நேர்படி லேநிலை கோனே - என்றும்
நிற்குமென் றேகண்டு நிச்சயங் காணெங்கள் கோனே.
131:

சத்தியும் பரமுந் தன்னுட் கலந்தே கோனே - நிட்டை
சாதிக்கி லிரண்டுந் தன்னுள்ளே காணலாங் கோனே.
132:

மூகைபோலிருந்து மோனத்தைச் சாதியெங்கோனே - பர
மூலநிலைகண்டு முட்டுப் பிறப்பறு கோனே.


daikkadar Siddhar LifeHistory:





  • Tamil Siddha Science is at least five thousand years old, but the values of the “the ancient scientists -Siddhars” are still applicable in today’s world.
  • Apart from the inherited Siddha medicine and yoga, Astrology is also widely used.
  • Siddhar Idaikadar’s findings and results in the field of astrology are still used in everyday activities, even yearly “panchangam” starts with the predictions of Siddhar Idaikadar.
  • He is one of the renowned Siddhar among the 18 Siddhas.
  • He was born in a place called Idaikadu and hence named Idaikadar.
  • He was a Shepherd by birth and led a modest and simple life with his goats.
  • While herding he used to sink himself into the inner self and would union with divine.
  • Bogar was amazed to see the act of a shepherd performing the intense yoga during his space travel.
  • Inspired by Idaikadar’s thirst for spiritual wisdom, Bogar transferred his Siddha knowledge to him.
  • Idaikadar soon became master in Siddha medicine, Siddha yoga, gnana philosophies.
  • He also attained the final stage of kundalini awakening and fully developed the energy into full blooming lotus and experienced the union with the oneness (macro aspect).
  • Idaikadar carved a niche for himself in the astronomy and astrology field.
  • Once by his acumen in area of astronomy, he predicted the drought which will prevail for 12 years.
  • Water scarcity was all over the place and the negative impacts of this affected the normal life of people.
  • Seeing the sufferings of public, Sri Idaikadar devised a method to arrange nine planets, so as to remove the drought and benefit the people.
  • His philosophical style of poetry is unmatched and the embedded meanings are highly valuable to the modern stressful world.
  • He hints out that one, who conquers his mind from the worldly pleasures and savages, can attain the siddhi easily.
  • According to the directive from his mentor Sri Bogar, he spent his life helping people in Thiruvannamalai region and attained jeeva samathi there.
  •    More siddhar padalkal http://www.ytamizh.com/siddhar/idaikaadar/